அண்ணாமலை ஒரு காலி பாத்திரம்… ஆர்எஸ் பாரதி கடும் விமர்சனம்!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை

மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். ஏற்கனவே திமுக ஃபைல்ஸ் 1 என்ற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அனைத்தையும் சட்டப்படி சந்திக்க தயார் என கூறி வரும் அண்ணாமலை, நேற்று திமுக ஃபைல்ஸ் 2 தொடர்பான ஆவணங்களை தமிழக ஆளுநரான ஆர்என் ரவியிடம் ஒப்படைத்தார். திமுக ஆட்சியில் 5600 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆளுநரிடம் புகார் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெரிய இரும்புப் பெட்டியில் ஆவணங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்ட அண்ணாமலை, திமுகவின் இந்த ஊழல் குறித்து நடை பயணத்தின் போது மக்களிடம் விரிவாக எடுத்துக்கூறப்படும் என்றும் கூறினார். அதோடு திமுக ஃபைல்ஸ் 2 குறித்த வீடியோவையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்எஸ் பாரதி, அண்ணாமலை ஆளுநரிடம் திமுக குறித்து புகார் அளித்திருப்பது மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி என கூறியுள்ளார். ஆளுநரிடம் கொடுத்த மனுவை அண்ணாமலை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு தங்களின் தலைவர் வரிக்கு வரி பதில் அளிப்பார் என்றும் ஆர்எஸ் பாரதி கூறினார்.

அண்ணாமலை எல்லை மீறி போகிறார் என்றும், எங்களாலும் புகார் சொல்ல முடியும் என்றும் கூறிய ஆர்எஸ் பாரதி, மணிப்பூர் விவகாரத்தால் தமிழக மக்கள் கொதித்துபோயுள்ள நிலையில் அண்ணாமலை அதனை திசை திருப்பும் முயற்சியாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார் எனவும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்களாக கொடுக்காமல், மணிப்பூர் விவகாரத்திற்கு எதிராக திமுக போராட்டம் நடத்திய பிறகு அண்ணாமலை ஆளுநரிடம் மனு அளித்தது ஏன் என்றும் ஆர்எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் என்றும், காலி பாத்திரம் எப்போதும் அதிக சத்தம் எழுப்பும் அதுபோலதான் அண்ணாமலையும் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார் என ஆர்எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.