கடந்த சில வாரங்களாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளில் நீர் நிரம்பி அங்கிருந்து காவிரியாற்றில் தமிழகத்தை நோக்கி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அதே நாள் மாலையிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதேபோல, நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்தது. மேலும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அருகே அடிப்பாலாறுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 119 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 177 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பாசனநீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. நீர்மட்டம் 65.80 அடியாகவும், நீர் இருப்பு 29.19 டிஎம்சியாகவும் உள்ளது.