தமிழ் சினிமாவில் பிறமொழிக் கலைஞர்களை பயன்படுத்தப் போவதில்லை என்பது போன்ற பேச்சு, தெலுங்கு சினிமாவில் தீயாய் பரவியது. இதுகுறித்து பவன் கல்யாண் தனது கருத்தைக் கூறியிருந்தார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக நாசரும் அதனை மறுத்து தனது கருத்தைக் கூறியிருக்கிறார். உண்மையில் என்ன நடந்தது? எதற்காக இப்படி ஒரு பேச்சு கிளம்பியது என விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

சில நாட்களுக்கு முன்னர், ஃபெப்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஊடகத்தினரை சந்தித்துப் பேசினார். அதில் அவர் ”தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவங்களுடைய பொதுவிதிகள் குறித்து சமீபத்தில் என்கிட்ட பேசினாங்க. தமிழ்த் திரைப்படத் துறை சீரான வளர்ச்சியோடும், சில ஒழுக்கத்தோடும் வளர வேண்டும். அதன் பட்ஜெட், படப்பிடிப்பு செலவுகள் எல்லாமே அதிகமாகிடுச்சு. இண்டஸ்ட்ரியில் முறைப்படுத்த சில விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்காங்க. அந்த விதிமுறைகளை மற்ற அமைப்போடு கலந்து பேசி, தீர்மானங்களாகக் கொண்டு வந்திருக்கோம்.” என்றவர் சில தீர்மானங்களைச் சொன்னதோடு கீழ்க்கண்ட தீர்மானத்தையும் சொன்னார்.

”தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனமும் (ஃபெப்சி) 2022 மார்ச் மாதத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முழுமையான முறையாக பின்பற்றவேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்நாட்டில் உள்ள கலைஞர்களை, தொழிலாளர்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பையும் தமிழ்நாட்டிலேயே நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என தயாரிப்பாளர்களிடம் வேண்டுக்கோள் விடுக்கிறோம். பெப்சியின் கீழ் இயக்கும் சங்கங்களில் உள்ள ஒவ்வொரு சங்கத்தினரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்யும் ஃபெப்சி வகுத்திருக்கிறது. இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், மேனேஜர்கள் பலருக்கும் பெப்சி விதிமுறைகள் விதித்திருக்கிறது” என ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.
ஃபெப்சியின் இந்த பேச்சு குறித்து ஹைதராபாத்தில் பவன் கல்யாணிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு பவன் கல்யாண் ”தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு தெலுங்கு தேச நடிகர் பவன் கல்யாண் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். ”எல்லா மொழி மக்களும் ஒன்று சேர்ந்தால் தான் சினிமா உருவாகிறது. நம் ஆட்களை மட்டுமே வேலை வைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எல்லை கடந்து யோசிக்கும் போதுதான் ‘ஆர்ஆர்ஆர்.’ போன்ற உலகப் படங்களை தமிழ்த் துறையும் வழங்க முடியும்” எனச் சொல்லியிருந்தார்.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நடிகர் நாசர், பவன் கல்யாணின் பேச்சுக்கு மறுத்து தெரிவித்ததுடன், தெளிவுபடுத்தியும் பேசினார். ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.

”மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன். பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கானத் தேவை இருக்கிறது. அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்
தமிழ்த் திரையுலகில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழ்ப் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல. எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்தச் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.