ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘வரும் காலங்களில் பன்னீர்செல்வத்துடன் இணைந்தே செயல்படுவோம். பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்’ என ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நடைபெறும் அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.விதினகரன் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக காரில் சென்றார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் டி.டி.வி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வரும் காலங்களில் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவுடனேயே பன்னீர்செல்வமும் நானும் ஒன்று சேர்ந்தோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை. அண்ணாமலை நடைபயணத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.