திருச்சி: திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ‘வேளாண் சங்கமம் 2023’ கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வேளாண் உழவர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் அரங்குகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
திருச்சி கேர் என்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழா 29ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து ஒவ்வொரு அரங்குகளாகப் பார்வையிட்டார்.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விவசாய எந்திரங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், இயந்திரங்கள் குறித்து கேட்டறிந்தார். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய நெல் வகைகளைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளையும் வழங்குகிறார்.
மேலும், நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் இந்த வேளாண் சங்கமத்தில் கலந்துரையாடப்படுகிறது.

இந்த கண்காட்சிக்கென ஏறத்தாழ 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 230 உள்ளரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் மாநில அரசின் 17 துறைகள், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த 3 பல்கலைக்கழகங்கள், 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் வகைகள், வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்க திடல்கள், பசுமைக் குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேலும், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல் விளக்கம் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. வேளாண் இடுபொருட்கள் விற்பனையும், நவீன வேளாண் இயந்திரங்களின் செயல் விளக்கங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

நேற்று திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். பின்னர் மாலை திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் 15 மாவட்ட திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின். இன்று வேளாண் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர் அதன்பிறகு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்ல உள்ளார்.