கேரளாவில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

கொச்சி,

கேரளாவின் கொச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவுக்கு புறப்பட்டது.

கிளம்பிய சிறிது நேரத்தில் பயணி ஒருவர் விமானத்துக்குள் தீயில் ஏதோ கருகும் வாசம் வருவதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றிய பிறகு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விமானத்துக்குள் தீ பற்றியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

இருப்பினும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்தது. அந்த விமானம் 175 பயணிகளுடன் தாமதமாக சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.