விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. கடந்தாண்டு நடந்த சீசனில் நடிகர் அசீம் வெற்றியாளராகவும் தொகுப்பாளர் விக்ரமன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த ஆண்டுக்கான 7வது சீசனின் புரோமோ ஷூட்டிங் நடந்ததுமே அதுகுறித்து விகடனில் எக்ஸ்க்ளூசிவாகச் செய்தி வெளியிட்டோம். சில தினங்களுக்கு முன் அந்தப் புரோமோ வெளியான நிலையில், போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என சமூகலைதளங்களில் தினமும் பல பெயர் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் தற்போது நிகழ்ச்சி தொடர்பான மேலும் சில அப்டேட்கள் நமக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்திருக்கின்றன. அதன்படி நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தொடங்கலாமென உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குவதால், போட்டியாளர்கள் வழக்கம் போல தீபாவளி, புத்தாண்டு, மற்றும் பொங்கல் பண்டிகைகளை பிக் பாஸ் வீட்டில்தான் கொண்டாட இருக்கிறார்கள்.
இன்னொரு அப்டேட் பிக் பாஸ் வீடு குறித்தது. வழக்கம் போல் இல்லாமல் இந்தாண்டு இரண்டு பிக் பாஸ் வீடுகள் அமைக்கப்பட இருக்கின்றன. ஒரு வீடானது வழக்கமான பிக் பாஸ் வீட்டைப் போல ஏசி, சோபா, மெத்தை படுக்கைகள் என சகல வசதிகளுடன் இருக்குமாம். இன்னொரு பிக் பாஸ் வீட்டில் எந்த வசதியும் இருக்காதாம். கிட்டத்தட்ட தண்டனைக்கு ஆளாகும் போட்டியாளர்களை இந்த வீட்டில் தங்க வைக்கலாமென்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படுவர்கள் இந்த இரண்டாம் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் மீண்டும் பழைய வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனில் கடினமான சில டாஸ்குகள் அவர்களுக்கு இருக்குமெனவும் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு வீடு கான்செப்ட் மற்ற மொழி பிக் பாஸ்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டதுதானாம். தமிழில் முதன் முறையாக இந்த சீசனில் கொண்டு வர இருப்பதாகவும் சொல்கிறார்கள்.