ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை லேண்டர் தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.
அந்த வகையில், நாளை மறுநாள் (ஆக.23) மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில் இன்று லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எடுக்கப்பட்டவையாகும். தற்போது சந்திரயான் 3 நிலவில் இருந்து 25 km x 134 km குறைக்கப்பட்ட தூரத்தில் உலவி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் தற்போது ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சி உலகின் கவனமும் இஸ்ரோவின் சந்திரயான் 3-ன் மீது திரும்பியுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே லேண்டர் எந்தப் பகுதியை தவிர்க்கலாம் எது தோதான இடமாக இருக்கும் போன்றவற்றை ஆராய்ந்து படம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Chandrayaan-3 Mission:
Here are the images of
Lunar far side area
captured by the
Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).This camera that assists in locating a safe landing area — without boulders or deep trenches — during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB
— ISRO (@isro) August 21, 2023
சந்திரயான் 3-ன் பயணம்: நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது.
தற்போது சுற்றுப்பாதை உயரத்தை சுருக்கி, நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.