நாட்டு வெடி குண்டு வீச்சின் பின்னணியில் யார்? திரியைக் கொளுத்தும் அண்ணாமலை

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் பாட வேளையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விசாரிக்கும் போது வேறு மாதிரியாக கூறுகின்றனர். பூண்டு பட்டாசை மொத்தமாக ஒன்று சேர்த்து உருண்டையாக்கி வீசப்பட்டதாக கூறுகிறார்கள். இதனால் கல்லூரியில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா, பட்டாசா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை கண்டிடாத மாணவர்கள் சண்டயால் கலவர சூழல் – வேளச்சேரியில் நாட்டு வெடி வீசி மோதல்

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். பாஜக தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

அதில், சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாச்சாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று திமுக அரசின் மீதான தனது விமர்சனத்தை வைத்தார்.

கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது. உடனடியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

வெடிகுண்டு கலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.