`சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன்.
அதன் பின் ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனிடையே அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் ‘அன்புக்கினியாள்’ மற்றும் ‘தும்பா’ படத்தில் நடித்த நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டனர்.செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் இன்று (செப்.13) அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மட்டுமே திருமணத்திலும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் தம்பதிக்கு திரைபிரபிலங்கள் , ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.