லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது 1919-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் தான் இங்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை அந்த நாட்டின் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.