திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்தவர் சுசிலா (34). இவர் கணவரைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார். இவருக்கும், முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், திருத்தணி காந்தி சாலைப் பகுதியில் சுசிலா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸாரும், அந்தப் பகுதியில் இருப்பவர்களும் சுசிலாவை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுசிலா உயிரிழந்தார்.

இதையடுத்து திருத்தணி காவல் நிலையத்தில் சுசிலாவின் குடும்பத்தினர் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில் சுசிலாவுடன் நட்பிலிருந்த ரஞ்சித் என்பவர் தலைமறைவாக இருந்தார். அதனால், அவர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, சுசிலாவைக் கொலைசெய்தது ரஞ்சித் எனத் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரஞ்சித்துக்குக் கடன் தொல்லை இருப்பது தெரியவந்திருக்கிறது. அதற்காக சுசிலாவிடம் நகைகளைக் கேட்டிருக்கிறார். அப்போது சுசிலா, நகைகளைக் கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த தகராறில், இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணயில் தெரியவந்திருக்கிறது. அதனால் சுசிலா கொலை வழக்கில் ரஞ்சித்தை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இது குறித்து திருத்தணி போலீஸார், “கொலைசெய்யப்பட்ட சுசிலா, வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, திருத்தணி காந்தி சாலைக்கு வந்து ரஞ்சித்தைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்றும் ரஞ்சித்தைச் சந்தித்து சுசிலா பேசியிருக்கிறார். அப்போதுதான் ரஞ்சித் `எனக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. அந்தக் கடனை அடைக்க உன்னுடைய தங்க செயினை கழற்றித் தா…’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுசிலா மறுத்துவிட்டு, ரஞ்சித்துடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

அதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் கழுத்தை அறுத்திருக்கிறார். அப்போது சுசிலா போராடியதில் ரஞ்சித்துக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் காயம் குறித்து ரஞ்சித்தின் குடும்பத்தினர் கேட்டபோது, பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகப் பொய் சொல்லியிருக்கிறார். சுசிலாவும் ரஞ்சித்தும் நீண்டகாலமாக பழகியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.