”ஓவியத்துக்கும், உன் அன்புக்கும் நன்றி” – சத்தீஸ்கர் சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் கான்கரில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தின்போது, தனது ஓவியத்தை வரைந்து கொண்டு வந்த சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியில் நவம்பர் 2-ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அகன்ஷா என்ற சிறுமி பிரதமரின் ஓவியத்தை தன்னுடன் கொண்டு வந்திருந்தார். சிறுமியின் கையில் அவரது ஓவியத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, அவரின் முகவரியை எழுதி கொடுக்கும்படி கூறியதாக தெரிகிறது. அதைப் பெற்றுக் கொண்ட அவர், அகன்ஷாவுக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “அன்புள்ள அகன்ஷாவுக்கு, எனது வாழ்த்துகள். கான்கர் நிகழ்ச்சிக்கு நீ கொண்டு வந்த ஓவியம் என்னை வந்தடைந்தது. உன்னுடைய அன்புக்கு மிக்க நன்றி. நீ மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், அனைத்து நன்மைகளும் நீ அடைய வேண்டும். உன்னுடைய பிரகாசமான எதிர்காலத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.

உன்னைப் போல இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் என்பது மிகவும் முக்கியமானவை. உங்கள் கனவை நனவாக்குவதோடு, நாட்டின் முன்னேற்றத்துக்கும் புதிய பாதை அமைக்க வேண்டும். சத்தீஸ்கர் மக்களிடம் நான் எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டின் முன்னேற்றப் பாதையில் மாநில மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.