சத்தீஷ்காரில் பயங்கரம்… மாவோயிஸ்டுகளால் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை…!

ராய்ப்பூர்,

தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் சத்தீஷ்காரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகியை மாவோயிஸ்டுகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக இருப்பவர் ரத்தன் துபே. இவர் கவுஷல்நார் பகுதியில் உள்ள மார்கெட்டிற்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவர் மாவோயிஸ்டுகளால் கோடரியால் தாக்கப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலில் யாரும் பங்கேற்க கூடாது என மக்களை எச்சரிக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.