வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ல் நாடு திரும்புகிறார் : கோர்ட்டில் தகவல்

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பின்னர் தயாரிப்பாளராகி பின்னர் நடிகர் ஆனவர் ஆர்.கே.சுரேஷ். சென்னையில் செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் 21பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான ஆருத்ரா இயக்குனர்களில் ஒருவரான ரூசோ இந்த நிறுவனத்தின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பெரிய தொகை வாங்கியதாக சொன்னார். இதனால் இந்த வழக்கில் ஆர்.கே.சுரேசும் சேர்க்கப்பட்டார்.

ஆனால் படம் தயாரிப்பதற்காகத்தான் ரூசோவுடன் வரவு செலவு வைத்திருந்ததாகவும், மோசடிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் ஆர்.கே.சுரேஷ் மறுத்தார். வெளிநாட்டுக்கு சென்றிருந்த ஆர்.கே.சுரேஷ் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று பயந்து அங்கேயே தங்கி விட்டார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'வருகிற டிசம்பர் 10-ந்தேதி ஆர்.கே.சுரேஷ் இந்தியா வருகிறார். இதுகுறித்து பிரமாண மனு தாக்கல் செய்யவும் அவர் தயாராக உள்ளார்' என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 8ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.