ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஏரிக்கரைப் பகுதியில், நேற்று ஒரு கும்பல் மதுபோதையில் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் நரேந்திரனும் இன்னொரு காவலரும் நேற்றிரவு ஏரிக்கரைக்குச் சென்றனர். அப்போது காவலர்களைப் பார்த்ததும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. இதில் பிரபு என்பவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பிரபு, ஏரிக்கரைப் பகுதியில் தன்னுடைய செல்போன் இருக்கிறது. அதை எடுக்க வேண்டும் என்று போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

அதனால் பிரபுவை பைக்கில் அழைத்துக் கொண்டு, காவலர் நரேந்திரன் மீண்டும் ஏரிக்கரைக்குச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல், பிரபுவையும் காவலர் நரேந்திரனையும் சரமாரியாகத் தாக்கியது. அப்போது நரேந்திரன், `நான் போலீஸ்…’ என்று கூறியதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் நரேந்திரன் பலத்த காயமடைந்தார். இந்தத் தகவல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குக் கிடைத்ததும், சம்பவம் நடந்த இடத்துக்கு கூடுதல் போலீஸார் சென்று நரேந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபுவை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் காயமடைந்த காவலர் நரேந்திரன் அளித்த தகவலின்படி, சிலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியில் காவலர் ஒருவரை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர். இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். தற்போது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் நரேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.