உலக கோப்பை 2023 தொடர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முன்னணியில் இருக்கிறது. மூன்று அணிகளும் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியை அடைந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்தவகையில் பார்க்கும்போது நியூசிலாந்து அணி (NRR +0.398) ரன்ரேட் வைத்து முதல் இடத்தில் இருக்கிறது.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு இப்போது இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி மழைக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. பெங்களூரில் நடைபெறும் இப்போட்டி மழையால் கைவிடப்படும் சூழலில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலே போதும். இவ்விரண்டு அணிகளுக்கு இடையில் அதிக ரன்ரேட் இருக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இப்போது பாகிஸ்தான் அணியே ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக ரன்ரேட் இருப்பதால் பாகிஸ்தான் அணி 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்திய அணியுடன் மோதும்.
அதனால் பெங்களூரில் நடைபெறும் இலங்கை – நியூசிலாந்து போட்டியை பாகிஸ்தான் அணி ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒருவேளை போட்டி நடைபெற்றால் இங்கிலாந்து அணியை கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமில்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு இப்போது ஓரளவுக்கு பார்முக்கு திரும்பியிருக்கிறது. கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோற்கடித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கிலாந்து அணியை மிகப்பெரிய ரன்ரேட் அடிப்படையில் வீழ்த்துவது எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவால் தான்.
இப்போது அந்த அணிக்கு இருக்கும் பவுலிங்கை வைத்துக்கொண்டு இப்படியொரு இடியாப்ப நெருக்கடியை எதிர்கொள்வது எல்லாம் சாத்தியமற்றது. அதனால் பாகிஸ்தான் அணி வேண்டுவது என்னவென்றால், இலங்கை – நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும் என்பது தான். அது நடக்குமா? என்பது இன்னும் 10 மணி நேரத்துக்குள் தெரிந்துவிடும்.