இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட்; போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற நபர்

மும்பை,

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அரையிறுதி போட்டி நாளை (15-ந்தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, ஜே.ஜே. காவல் நிலைய அதிகாரிகள் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், நகரின் வடக்கே அமைந்த மலாடு பகுதியில் வீட்டில் இருந்த ஆகாஷ் கோத்தாரி என்பவரை பிடித்து சென்று விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், பல்வேறு குழுக்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலின்படி, ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.

டிக்கெட்டுகளின் உண்மையான விலையை விட 4 முதல் 5 மடங்கு கூடுதலாக விலை வைத்து அவை விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இதனால், மோசடி மற்றும் பிற குற்றங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அவர் டிக்கெட்டுகளை எங்கிருந்து வாங்கியுள்ளார். இந்த மோசடியில் அவருடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.