டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட் மது – ஐகோர்ட்டில் அரசு புது அப்டேட்!

சென்னை: டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் புரியும் S.பிரதாப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பாலித்தின், அலுமினியம், காகிதம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் டெட்ரா அட்டையை மறுசுழற்சி செய்வதற்கான மையங்கள் இல்லை.டெட்ரா பாக்கெட்டுகள் சுற்றுச்சூழல் பாதிப்பை உள்ளாக்கும். டெட்ரா பேக்குகளில் அடைத்து மதுபானங்களை விற்பனை செய்வதால், உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், மதுபானங்களை கடத்துவோருக்கு சாதகமாகவும் அமையும். எனவே, டாஸ்மாக்கில் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்க மதுபானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.கே.எம்.சம்சு நிஹார், அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார், டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் சதீஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சண்முகவள்ளி சேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது எனவும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், “டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை. மேலும், மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.