டூப்பை தவிர்த்து நிஜமாகவே உணவுகளை தயார் செய்தார் நயன்தாரா: 'அன்னபூரணி' அப்டேட்

நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் 'அன்னபூரணி'. இந்த படத்திற்கு 'தி காடஸ் ஆப் புட்' என்று டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். படத்தை புதுமுகம் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த படத்தில் நயன்தாரா சாதாரண குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற சமையல் கலைஞராக எப்படி மாறுகிறார். அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த படம் சமையலைச் சுற்றி வருவதால், செப்பாக நயன்தாரா தனது 100 சதவிகிதம் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் பிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார்.

தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்தார். நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு 'அன்னபூரணி' படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.