100 கோடி சம்பளம் பெறும் 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார்?

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். அவரது இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'புஷ்பா'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

முதல் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கு 25 கோடி சம்பளம் தந்ததாகத் தகவல் வெளியானது. அப்படம் சுமார் 350 கோடி வசூலித்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல். அதனால், இரண்டாம் பாகத்திற்கான வியாபாரம் முதல் பாகத்தை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை மிகப் பெரும் விலைக்கு விற்றிருக்கிறார்களாம். இரண்டாம் பாகத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடப்பதால் படத்தின் இயக்குனருக்கும் பெரும் தொகை ஒன்றை சம்பளமாக வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாம். ஓடிடி உரிமையில் பெற்ற கணிசமான தொகையுடன் சேர்த்து அவருக்கு 100 கோடி சம்பளத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜமவுலிக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடி சம்பளத்தைப் பெறும் இரண்டாவது இயக்குனர் சுகுமார். தமிழில் இன்னும் எந்த ஒரு இயக்குனரும் 100 கோடி சம்பளத்தைத் தொடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.