பஞ்சத்தின் விளிம்பில் காசா: ஐ.நா உணவு உறுதி திட்டத் தலைவர் எச்சரிக்கை

காசா நகர்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், அதனால் அங்கு இன்னும் அதிகப்படியான உணவு, நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் கிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை ஹமாஸ் குழுவினர் நடத்தினர். முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பாரா நேரத்தில் நிகழ்ந்த அந்தப் பெரிய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது. இதில் குழந்தைகள் உள்பட 14,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச சமூகங்களின் அழுத்தம் காரணமாக பிணைக் கைதிகளாக விடுவிக்க ஏதுவாக 4 நாட்கள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் – ஹமாஸ் கடைபிடித்து வருகிறது. இதுவரை ஹமாஸ் 58 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. இன்று நான்காவது நாளில் இன்னும் அதிகமான பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது.

இந்தச் சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட காசா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் மெக்கெய்ன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “காசாவில் தீவிர பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் பேரழிவு தரும் சம்பவங்கள் நிகழும். பஞ்சம் தன்கூடவே கடுமையான நோய்களையும் கொண்டுவரும். ஆகையால் உடனடியாக உதவிகள் வேண்டும். இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்படும் என்பதைக் கணித்ததன் அடிப்படையில் இப்போது கிடைக்கும் உதவிகள் நிச்சயமாகப் போதாது. இந்த 4 நாட்கள் போர் நிறுத்தத்தால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம். இது மிகவும் குறைவானதே. பட்டினியில் உள்ள அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் அதற்கு நாங்கள் பாதுகாப்பாக எல்லா பகுதிகளையும் அடைய வேண்டும்” என்றார்.

ஏற்கெனவே யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் காசாவில் உள்ள குழந்தைகள் மத்தியில் 30 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர பஞ்ச அபாயம் குறித்து ஐநா உணவு உறுதித் திட்ட அமைப்பும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவுக்கு 200 ட்ரக்குகளில் உணவு, நிவாரணப் பொருட்கள் சென்றுள்ளனர் என்று இஸ்ரேல் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை நாங்கள் (அமெரிக்கா) ஓயமாட்டோம்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.