புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, “கவர்னர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்தையும் பா.ஜ.க-வுடன் சேர்த்து விடுகின்றனர். இருக்கும் அனைத்து துறைகளையும் பா.ஜ.க-வில் சேர்த்து விடுங்கள். தமிழக காவல்துறையை தி.மு.க காவல்துறை என்று அழைக்கலாமா? ஒரு அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கிருந்து கட்டு கட்டாக, பெட்டி பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல தமிழகத்தின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்லிவிட முடியுமா? அமலாக்கத்துறையில் ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் பிரச்னை இருக்கலாம்.

பிரச்னைக்குரிய அதிகாரிகளும் இருக்கலாம். அதற்காக ஒரு நபருக்காக, `அந்த துறையே மோசமானது. அனைவரும் லஞ்சம் வாங்குவார்கள். அது மத்திய அரசின் அமைப்பு, நாங்கள் மாநில அரசின் அமைப்பு. எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம்’ என கூறலாமா? இந்த பிரச்னையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்துச் செல்கிறது. தவறு நடந்திருந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்துவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும்.
ஒருவர் தவறு செய்தால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவறுதான். கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சியில், அமைச்சர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அங்கே சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு, அரசு மீது குறை கூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்னை நடந்தது. அதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முத்திரை குத்த முடியாது. கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுவையில் முதலமைச்சருடன் இணைந்து செயல்படுகிறேன். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை. அரவணைக்கும் பழக்கம்தான் இருக்கிறது. மருத்துவக் கல்வி விவகாரத்தில் கவர்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார். நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? அனைத்து விவகாரத்துக்கும் கவர்னர்தான் காரணமா? வெறும் வாய்க்கு கவர்னர்தான் அவலா? எதிர்கட்சித் தலைவர் சிவா கவர்னரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.