நாடாளுமன்றத்துக்குள் தோல்வியின் விரக்தியை கொண்டு வர வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: 5 மாநில பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் கொண்டு வர வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நடந்து முடிந்த 5மாநிலத் தேர்தல்முடிவுகள் வந்துவிட்டன. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு நான் அறிவுரை கூற விரும்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூற வேண்டுமானால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு.

5 மாநிலத் தேர்தல் தோல்வியின் விரக்தியை வெளிக்காட்டுவதற்கான திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் தோல்வியின் விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் அவர்கள் கொண்டு வரக்கூடாது.

கடந்த 9 ஆண்டுகாலமாக எதிர்மறையாகவே செயல்பட்டு வரும் அவர்கள் நேர்மறையாக முன்னேறினால், நாடு அவர்களைப் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்ளும். அவர்களுக்கு ஒரு புதிய கதவு திறக்கப்படலாம்.

அனைவரின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஏற்பட்ட தோல்விகளின் விரக்தியை தயவுசெய்து நாடாளுமன்றத்துக்குள் வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.