கட்டுப்பாட்டை இழந்த லாரியால் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த வாகனங்கள்.. 16 பேர் பலி

கராகஸ்:

வெனிசுலாவின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சுமார் 17 வாகனங்கள் மீது மோதியதில் அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்ததுடன், தீப்பிடித்து எரிந்தன. ஒரு பேருந்து முற்றிலும் கருகிவிட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.