சிறுவர் சீர்திருத்த இல்ல சிறுமி பலாத்காரம்; உதவிய 2 பெண் ஊழியர்கள் கைது

டேராடூன்,

உத்தரகாண்டின் ஹல்த்வானி நகரில் சிறுமிகளுக்கான சிறுவர் சீர்திருத்த இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், குற்றவாளிகளான சிறுமிகள் அடைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.

இந்நிலையில், இதில் உள்ள 15 வயது சிறுமி ஒருவரை இல்லத்தில் வேலை செய்யும் பெண் பணியாளர்களான தீபா மற்றும் கங்கா ஆகிய இருவர் வெளியே அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில், பலாத்காரத்திற்கு உதவி புரிந்ததற்காக 2 பெண் பணியாளர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினரான ரவீந்திர ரவுதலா என்பவர் போலீசில் அளித்த எழுத்துப்பூர்வ புகாரில், சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் உள்ள ஒரு சிறுமியை 2 பெண் பணியாளர்களும் வெளியே அழைத்து சென்றுள்ளனர்.

அதன்பின் சிறுமி பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். இதுபற்றி ஹல்த்வானி போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ், கடந்த வெள்ளி கிழமை இரவில் வழக்கு பதிவு செய்தனர்.

இதுபற்றி முழுமையான விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளியான பெண்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என நகர ஏ.எஸ்.பி. ஹன்ஸ் சிங் கூறியுள்ளார்.

சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். அதில், சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.

இதுபற்றி குழந்தைகள் மற்றும் மகளிர் முன்னேற்ற துறைக்கான மந்திரி ரேகா ஆர்யா கூறும்போது, குற்றவாளிகளில் ஒருவர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மற்றொருவர் திருப்பி அழைக்கப்பட்டு விட்டார் என கூறியுள்ளார்.

முழுமையான விசாரணைக்கு பின்னர் 2 பெண்களுக்கு எதிராக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரேகா கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.