மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (19) நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இவ் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே ஜே முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமுல்ப்படுத்தி, அவற்றை மாவட்டத்தின் முன்னேற்றத்தில் நேரடியாகப் புலப்படும் விதமாக செயற்படுத்துமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்ட வரைபுகளை மேற்கொள்ளும் போது பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி மாவட்டத்திற்குத் தேவையான முதன்மை விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் 37 அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற் கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக நிறுவன உத்தியோகத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நிறுவனங்களினால் போசாக்கின்மை, பாடசாலை இடை விலகல் போன்றவற்றைத் நிவர்த்தி செய்தல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை தடுத்தல், தொழில் பயிற்சி வழங்கி சுயதொழிலை ஊக்குவித்தல், வாழ்வாதார உதவி மற்றும், மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை வழங்குதல், வீட்டுத் தோட்ட செய்கைகளை. ஊக்குவித்தல், கால்நடைகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயளார்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.எம் ரிஸ்வி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நுண்நிதி ஒருங்கிணைப்பாளர் ஆர். சுதர்ஷன் மற்றும் வலய கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.