உஷாரய்யா உஷாரு… கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த 2,500 மோசடி கடன் ஆப்கள் நீக்கம்!

2,500 மோசடி கடன் செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மோசடி ஆப்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “கூகுள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3,500 முதல் 4,000 கடன் வழங்கும் ஆப்களை ஆய்வு செய்துள்ளது.

அதிகப்படியான வட்டி விகிதங்கள் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள் பற்றி அதிகரித்து வரும் கவலைகளைத் தீர்க்க 2,500-க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்களுக்கு கடன் வழங்குவதற்கான பாலிசியை கூகுள் மாற்றியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட பாலிசியின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஆப்கள் மட்டுமே ப்ளே ஸ்டோரில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற பங்குதாரர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டங்களிலும் இந்த பிரச்னை குறித்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.   

டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்களை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தொடர்ந்து பகுப்பாய்வு செய்கிறது. இம்மையம் வழங்கும் அறிக்கையின் கீழ், சந்தேகத்திற்குரிய ஆப்களை தடுப்பதற்கான நடவடிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொள்கிறது. 

பள்ளிகளில் சைபர் செக்யூரிட்டி மற்றும் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் வகையில், ஆர்பிஐ `எலெக்ட்ரானிக் பேங்கிங் அவார்னஸ் ப்ரோக்ராம்களை’ ( Electronic Banking Awareness Program – e-BAAT) நடத்துகிறது.

குறுஞ்செய்திகள், வானொலி ஒலிப்பரப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் கையேடுகள் மூலமாக பலவிதமான மக்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

சைபர் கிரைம்

அரசாங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், மோசடி கடன் ஆப்களிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன’’ என்று கூறியுள்ளார்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் அனைத்து ஆப்களையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களிடமிருந்து பணம் ஏமாற்றப்படும் பட்சத்தில், அந்த ஆப்களை குறித்து சைபர் க்ரைம் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

இதன்மூலம் வரும் காலங்களில் அந்த மோசடி ஆப்கள் மூலம் ஏமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.