ரி-ரிலீஸ் படங்களின் அமோக வரவேற்பை சமீபத்திய திரையரங்க காணொலிகளின் மூலம் நாம் கண்டிருப்போம்.
ஏற்கெனவே பார்த்து ரசித்த பல திரைப்படங்கள் தற்போது ரி-ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தனுஷின் ‘3’, ‘மயக்கம் என்ன’, ரஜினியின் ‘பாபா’, ‘முத்து’, ‘ஆளவந்தான்’ ஆகிய திரைப்படங்களின் காட்சிகளை ரசிகர்கள் துள்ளலோடு கொண்டாடி மகிழ்கின்றனர். இதைத் தொடர்ந்து, தற்போது ‘வாரணம் ஆயிரம்’, ‘வல்லவன்’ ஆகிய திரைப்படங்களும் தற்போது ரி-ரிலீஸ் ஆகியிருக்கின்றன.

பலரின் ஆவலான எதிர்பார்ப்பைத் தொடர்ந்து அடுத்தாண்டு விஜய்யின் ‘கில்லி’ திரைப்படமும் ரி-ரிலீஸாகுமென கூறி வருகிறார்கள். ரி-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் டிக்கெட் விலையோ குறைவுதான். இந்தப் படங்களுக்குக் கிடைத்திருக்கும் இப்படியான மார்கெட்டுக்கு இந்த டிக்கெட் விலையையும் ஒரு காரணமாகக் கூறலாம்.
இது போன்று ரி-ரிலீஸ் படங்களுக்குக் கிடைக்கும் முழுமையான லாப மார்கெட் குறித்துத் தெரிந்து கொள்ள ரோகிணி திரையரங்கத்தின் உரிமையாளரான ரேவந்திடம் பேசினோம்.
“முன்பெல்லாம் நட்சத்திரங்களின் பிறந்தநாளையொட்டி அவர்களின் படங்களை ரி-ரிலீஸ் செய்து வந்தோம். ‘லீன்’ காலத்தில் படங்களை ரி-ரிலீஸ் செய்து பார்த்ததன் மூலம் ரிசல்ட்டாக கிடைத்தது இந்த வரவேற்பு. அதாவது பெரிய திரைப்படங்கள் வெளிவராத காலகட்டங்களில் இதுபோன்று திரைப்படங்களை ரி-ரிலீஸ் செய்து பார்த்தோம்.
சில திரைப்படங்கள் ‘கல்ட் கிளாசிக்’காக இருக்கும். சில திரைப்படங்கள் வெளியான சமயத்தில் சரியான வரவேற்பைப் பெற்றிருக்காமல் அதன் பிறகு மக்கள் அதனைக் கொண்டாடியிருப்பார்கள். அப்படியான திரைப்படங்களைத்தான் இப்போது ரி-ரிலீஸ் செய்து வருகிறோம். ‘பாபா’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய திரைப்படங்கள் ரீலிஸான வேளையில் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

இந்தத் திரைப்படங்களெல்லாம் ஓ.டி.டியில் இருந்தாலும் அதனை தியேட்டர் அனுபவத்தில் பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த வரிசையில் தனுஷின் ‘3’ திரைப்படமும் அடங்கும். இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு வெளியானபோது இப்படியான பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மக்கள் தற்போது இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். ரி-ரிலீஸ் திரைப்படங்களுக்கும் ஷேர் வழியாகத்தான் லாபத்தைக் கணக்கிடுவார்கள். பெரும்பான்மையாக 50 – 50 ஷேர் திரையரங்கத்திற்கும், வினியோகஸ்தருக்கும் இருக்கும். சில சமயங்களில் 60 – 40 எனவும் ஷேர் மாற்றம் பெறும். பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்யும்போது திரையரங்கத்திற்கு அதிகளவில் ஷேர் கிடைக்கும். ரி-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் டிக்கெட் விலை என்பது 100 ரூபாய்க்குள்தான் இருக்கும்.
இப்போது ஒரு மாதத்திற்கு ரி-ரிலீஸ் செய்யவில்லையென்றால் திரையரங்கம் நஷ்டத்தைச் சந்திக்கும். சமீபத்தில், ‘லியோ’ திரைப்படத்திற்குப் பிறகு எந்தத் திரைப்படமும் பெரிதளவில் ஓடவில்லை. தற்போது ‘3’, ‘மயக்கம் என்ன’ திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்றுவருகின்றன. டிக்கெட் விலையைக் குறைவாக நிர்ணயித்து விற்பனை செய்வதன் மூலம் லாபம் குறைவாகத்தான் கிடைக்கும். இருப்பினும், இந்தக் காட்சிகளெல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகின்றன. புதிய திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் வரவேற்பைப் பெறாத சமயத்தில் இது பெட்டர்தான். ரி-ரிலீஸ் செய்வதைச் சரியான காலகட்டத்தில்தான் திட்டமிடுவார்கள்.
இந்த டிசம்பர் மாதத்தில் ‘கேப்டன் மில்லர்’ வெளியாகவிருந்தது. ஆனால், அத்திரைப்படத்தின் ரிலீஸ் பொங்கல் பண்டிகைக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இம்மாதிரியான பெரிய திரைப்படங்கள் வெளிவராத சமயத்தில் ரி-ரிலீஸ் செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் திட்டமிடுவார்கள். அடுத்தாண்டு ‘கில்லி’ திரைப்படத்தை ரி-ரிலீஸ் செய்வதாகப் பேசி வருகிறார்கள். இத்திரைப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்திரைப்படம் ரி-ரிலீஸானால் பெரிய வசூல் சாதனையைப் புரியும். ‘3’, ‘பாபா’ திரைப்படங்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம். அவர், “ரி-ரிலீஸ் படங்களுக்கான டிக்கெட் விலை குறைவாக இருப்பதனால் இப்படியான நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வழக்கமான டிக்கெட் கட்டணம் ரி-ரிலீஸ் படங்களுக்கு இருந்தால் கூட்டம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. டிக்கெட்டின் விலையும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கட்டணத்தை நிர்ணயிக்கும்போது கூட்டம் அதிகளவில் வருகிறது. ஆட்கள் யாரும் வராமலிருப்பதற்குக் குறைவான கட்டணத்திற்கு ஆட்கள் வருவது லாபம்தான். ஆடியன்ஸ் அதிகளவில் வரும்போது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிதான். ரி-ரிலீஸ் பொறுத்தமட்டில் திரையரங்கத்திற்கு 60 சதவிகிதம் ஷேரும், விநியோகஸ்தருக்கு 40 சதவிகிதம் ஷேரும் கிடைக்கும். சில திரைப்படங்களுக்கு 50 – 50 ஷேரும் இருக்கும். இந்த வருடம் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் ‘வாரணம் ஆயிரம்’, ‘வடசென்னை’, ‘3’ ஆகிய மூன்று திரைப்படங்களும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன” என்றார்.