புதுச்சேரி: புதுச்சேரியில், கடல் நீர் செந்நிறமாக மாறியது குறித்து, நிபுணர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி, கடல் கடந்த செப்.1ம் தேதி செந்நிறமாக மாறியது. அதனைத் தொடர்ந்து 2 மாதத்தில் இரு முறை கடல் செந்நிறமாக காட்சி அளித்தது. குறிப்பாக குருசுக்குப்பம் முகத்துவாரம் துவங்கி சீகல்ஸ் ரெஸ்டாரண்ட் வரை கடல் செம்மண் நிறத்தில் காட்சி அளித்தது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடல் நீரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ‘ஆல்கல் புளூம் எனும் சிவப்பு கடற்பாசிகள் நச்சுகளை உமிழ்வதால், கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அறிந்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குநர் வரலட்சுமி, அந்தமானில் உள்ள புதுச்சேரி பல்கலை கடல்சார் படிப்பு துறை தலைவர் மோகன்ராஜூ, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கடல் சூழ்நிலையில் துறை உதவி பேராசிரியர் குமரேசன், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் குழு அமைத்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், சிறப்பு குழுவினர் நேற்று புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், கடல் செந்நிறமாக மாறியது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, குருசுக்குப்பம் கழிவுநீர் வாய்க்கால் கடலில் கலக்கும் பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்பு, கடல்நீர் மாதிரிகள் சேகரித்தனர். தொடர்ந்து, வாய்க்கால் பகுதியில் உள்ள காகித ஆலை, சாயப்பட்டறைகளை ஆய்வு செய்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், ‘கடல் செந்நிறமாக மாறியது போது எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
எதிர்காலத்தில் கடல் செந்நிறமாக மாறாமல் இருக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தயாரித்து பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement