'பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பகவத் கீதை, ராமாயணம் போன்று புனிதமானது' – மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ்

போபால்,

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன.

இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவியேற்றார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மோகன் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த தேர்தல் அறிக்கை எங்களுக்கு பகவத் கீதை, ராமாயணத்தை போன்று புனிதமானது. அதில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.

மாநில அரசின் பணி என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுதான். அதோடு, மாநிலத்தின் நற்பெயரையும், நாட்டின் நற்பெயரையும் உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு எங்களது செயல்பாடு இருக்கும்.”

இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.