ஆஸ்கர் விருதுகள் எனக்காக காத்திருக்கும் : 2018 இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு இந்தியாவின் சார்பில் '2018' என்ற படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்து அனுப்பி வைத்தது. நேற்று வெளியிடப்பட்ட ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியலில் 2018 இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் படங்களின் இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 88 சர்வதேச மொழித் திரைப்படங்களில் 15 படங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் '2018' படம் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக எனது நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இருப்பினும், இந்தப் போட்டியில் இந்தியாவை பிரநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த இந்தக் கனவு பயணத்தின் வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ படம் என்ற பெருமை ஒவ்வொரு இயக்குநரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டும் எதிர்பார்க்கும் அரிய சாதனையாகும். இந்தப் பயணத்துக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கனவின் ஆரம்பம் இன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நான் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.