Vijayakanth: அரவிந்தராஜ், ஆர்.கே. செல்வமணி, சமுத்திரக்கனி – இயக்குநர்களை உருவாக்கிய விஜயகாந்த்!

`இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், பல மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர்.

விஜயகாந்த்

சினிமா, அரசியல் மற்றும் பொதுவாழ்வு என அனைத்திலும் பலருக்கு உதவி வந்த விஜயகாந்த், ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்தியுள்ளார். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஊமை விழிகள்’ – அரவிந்தராஜ், ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ – லியாகத் அலி கான், ‘புலன் விசாரணை’ – ஆர்.கே. செல்வமணி, ‘மாநகர காவல்’ – எம். தியாகராஜன், ‘பரதன்’ -சபாபதி, ‘உளவுத்துறை’ – ரமேஷ் செல்வன், ‘வாஞ்சிநாதன்’ – ஷாஜி கைலாஷ் (தமிழில்), ‘தெற்கத்திக் கள்ளன்’ – கலைமணி, ‘வல்லரசு’ – என்.மகராஜன், ‘தாயகம்’ – ஏ.ஆர். ரமேஷ், ‘தேவன்’ – அருண்பாண்டியன் மற்றும் ‘நெறஞ்ச மனசு’ – சமுத்திரக்கனி என ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்ததுள்ளார். தனது சினிமா வாழ்வில் பெரும் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ராம நாராயணன் இருவர் இயக்கத்திலும் தலா 17 படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த்

இதுதவிர 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்து அப்போது கடனிலிருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தப் பெருமை அவரையே சேரும். அதுமட்டுமின்றி பல திரைக்கலைஞர்களுக்கு அவர் செய்த உதவிகளெல்லாம் எண்ணிலடங்காதது. அவரது இறப்பு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.