22 வருடம் கழித்து மீண்டும் கன்னடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்கள் அவருக்கு கை கொடுக்காமல் போனாலும் சில படங்கள் அவரது திரையுலக பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி கன்னட படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷன் என்பவர் நடிக்கும் படத்தில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் பெங்களூர் வந்த சிரஞ்சீவியை நடிகர் தர்ஷன் நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் தனது படத்தின் கதையும் அதில் சிரஞ்சீவி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தையும் பற்றி கூறியபோது ஆச்சரியப்பட்டு போன சிரஞ்சீவி நிச்சயமாக இந்த படத்தில் தான் நடிப்பதாக வாக்களித்துள்ளாராம். கடந்த 1996ல் கன்னடத்தில் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கிய சிப்பாயி என்கிற படத்தில் மேஜர் சந்திரகாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சிரஞ்சீவி, அதையடுத்து 2001ல் வெளியான ஸ்ரீ மஞ்சுநாதா படத்தில் கடவுள் சிவனாக நடித்திருந்தார். அந்த வகையில் 22 வருடங்கள் கழித்து மீண்டும் கன்னட திரையுலகில் நுழைய இருக்கிறார் சிரஞ்சீவி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.