ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தக் கோயில் உருவாவதற்காக முயற்சி மேற்கொண்ட அனை வருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவர் இந்த உலகில் உள்ளஅனைவருக்கும் சொந்தமானவர். அவர் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் கடவுள். இது நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவுவது உள்ளிட்டவை குறித்து ராமர் எடுத்துரைத்துள்ளார். மத, இன பாகுபாடு இல்லாமல் விளிம்பு நிலையில் உள்ளவர்களை தூக்கிவிட வேண்டும் என்று அவர் எப்போதும் கூறி வந்துள்ளார். அவர் உலகம் முழுவதுக்குமான செய்தியை கூறியுள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீட்டெடுக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.