உச்ச நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கருத்து

சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதல் வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பை நீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை கைதி உட்பட குற்றவாளிகள் அனைவரும் தண்டனை காலம் முடியும் முன்பு, குஜராத் மாநில பாஜக அரசால், கடந்த 2023 ஆகஸ்ட் 15 விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசின் விடுதலை உத்தரவை எதிர்த்து, பில்கிஸ் பானுவும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உட்பட மாதர் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (08.01.2024) குஜராத் மாநில பாஜக அரசின் உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேறி சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்காது என்ற எடுத்த கொள்கை முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதி, சமூக நீதி காக்கும் இரண்டு தீர்ப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.