
இயக்குனர் எழிலின் 25 ஆண்டு சினிமா பயணம் : விழா நடத்தி கொண்டாடுகிறார்கள்
விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.எழில். தொடர்ந்து, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம் ரவி, பாவனா நடித்த “தீபாவளி”, விமல், பிந்து மாதவி நடித்த “தேசிங்குராஜா”, விக்ரம் பிரபு நடித்த “வெள்ளக்காரதுரை”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”, கவுதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த சத்தம்” உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். தற்போது விமல் நடிக்க “தேசிங்குராஜா-2” படத்தை இயக்கி வருகிறார்.
எழில் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அதனை 'தேசிங்கு ராஜா 2' படத்தின் தயாரிப்பாளர் பி.ரவிசந்திரன் விழா நடத்தி கொண்டாடுகிறார். இந்தவிழா வருகிற 27ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடக்கிறது. எழில் படங்களின் தயாரிப்பாளர்கள், அவரது படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். எழிலை அறிமுகப்படுத்திய சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி துவக்கி வைக்கிறார். எழில் படத்தில் நடித்த விஜய், அஜித், சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.