`பிக் பாஸ்’ சீசன் 7ல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம். அவர் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூகவலைதள பக்கங்களில் வந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் நீண்ட நாள்கள் அந்த வீட்டில் போட்டியாளராகப் பயணித்தார்.

வீட்டிலிருந்து வெளியேறியவர் ஜோவிகாவையும், அக்ஷயாவையும் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அவர் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் சரவண விக்ரமின் ஒரு பதிவு சமூகவலைதள பக்கங்களில் பேசு பொருளானாது.
`I Quit My Passion’ என்கிற கேப்ஷனுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவிட்டு `எல்லாருக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தார். ‘எதனால் அப்படியொரு முடிவு? இது எதைக் குறிக்கிறது?’ என்பது போல பலர் அதற்குப் பல்வேறு விதமான கமென்ட்கள் இட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சரவண விக்ரம் அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார். ஏதோ ஒரு மனநிலையில் நாம் சில விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து விடுவது வழக்கம். அதனை உணர்ந்த பிறகு அதைத் திருத்திக் கொள்ள முயல்வதும் இயல்பு. அப்படித்தான் இவரும் அந்தப் பதிவினை நீக்கி இருப்பார் எனத் தெரிகிறது.
‘திருமணம்’ தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஸ்ரேயா அஞ்சன். பிறகு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ரஜினி’ தொடரில் கதாநாயகியாக நடித்தார். அந்தத் தொடர் முடிவடைந்த பிறகு தனது கணவருடன் சேர்ந்து அவரது யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீ தமிழில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ என்கிற தொடரில் ஸ்ரேயா கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் மீண்டும் ஜீ தமிழிலேயே ஒரு புதிய தொடரில் கதாநாயகியாக ஸ்ரேயாவைப் பார்க்கலாம் என அவருடைய ரசிகர்கள் ஆர்வமுடன் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
‘ஈரமான ரோஜாவே 2’ தொடரில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வாதி கொண்டே. நடிகர் கார்த்திக் நடிக்கும் படத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இவரும், ‘வித்யா நம்பர்1’ தொடர் நாயகன் புவியும் இணைந்து ‘ஆராதனா’ என்கிற வெப் சீரிஸில் நடித்திருக்கின்றனர். இருவரும் ஏற்கெனவே பரிச்சயமானவர்கள். இந்த வெப் சீரிஸ் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருகிறது.