ஒன்பிளஸ் அதன் இரண்டு ஸ்மார்ட்போன்களில் AI அம்சங்களை சேர்த்திருக்கிறது. OnePlus 12 மற்றும் OnePlus 11 இரண்டு மொபைல்களுக்கும் லேட்டஸ்ட் ColorOS அப்டேட்டுகள் வழியாக புதிய AI அம்சங்களை கொடுக்கின்றன. சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த ஏஐ அம்சங்களை சேர்த்திருக்கிறது ஒன்பிளஸ். அதுவும் சரியாக சாம்சங் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அப்டேட்டுகள் வந்துள்ளன. ஆனால் இப்போதைக்கு சீன மார்க்கெட்டில் மட்டுமே ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்ட ஒன்பிளஸ் மொபைல்கள் கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட உலக மார்க்கெட்டுகளுக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பை ஒன்பிளஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
புதிதாக இருக்கும் ஏஐ அம்சம் கொண்ட ஒன்பிளஸ் மொபைலில் புகைப்படம் எடுத்தீர்கள் என்றால், உங்கள் புகைப்படங்களிலிருந்து நபர்களையும் பொருட்களையும் அகற்றலாம். அதற்காக புதிய AIGC ரிமூவர் கருவி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், OnePlus 12 மற்றும் OnePlus 11 ஆகியவை எந்தவொரு சாட்டிங்கில் இருக்கும் முக்கியமான தகவல்களையும், கட்டுரைகளில் இருந்து நோட்ஸ்களையும் பிரித்தெடுக்க புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஏஐ அம்சம் யூசர்களுக்கு உதவும்.
இவையனைத்தையும் சேஞ்ச்லாக் என்ற நிறுவனம் லீக் செய்திருக்கிறது. அது கொடுத்திருக்கும் கூடுதல் தகவல்களின்படி, அழைப்புகள், நேரம் ஆகியவற்றிலும் ஏஐ அம்சம் இடம்பெறும். ஆனால் அவை என்ன மாதிரியான செயல்பாடுகளை கொண்டிருக்கும் விரிவான விளக்கம் ஏதும் இல்லை. ப்ரீனோ டச் செயலி மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த AI அம்சங்களைத் தவிர, சீனாவில் உள்ள OnePlus 12 மற்றும் OnePlus 11 உரிமையாளர்கள் திரையை கிளிக் செய்யாமலேயே ஃபோனைத் திறக்க முடியும்.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய மாடல்கள் OxygenOS 14-ல் இயங்குகின்றன. எனவே இந்த அம்சங்கள் அனைத்து பயனர்களுக்கும் வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம். கடந்த மாதம் Samsung Galaxy S24 தொடர் ஸ்மார்ட்போன்களில் வந்த அதே Galaxy AI அம்சங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய மாடல்களும் பொருத்தப்படும் என்று சாம்சங் சமீபத்தில் அறிவித்தது. இப்போது இரண்டு மாடல்களுக்கும் இடையே ஏஐ அம்சம் சேர்க்கப்பட்டிருப்பதில் போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில், எது விற்பனையில் அதிகம் கோலோச்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.