புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி சமூக வலைதளப் பதிவில் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.
அதில் அவர், “காங்கிரஸ் கட்சியோ, காந்தி – நேரு குடும்பமோ என் தந்தைக்கு எந்த ஒரு பதவியையும் தானமாக வழங்கவில்லை. அவர் வகித்த பதவிகளுக்கு அவர் தகுதியானவராக இருந்ததால் அவற்றைப் பெற்றார். காந்தி குடும்பத்தினர் என்ன நிலச்சுவாந்தர்களா? அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக மரியாதை கொடுத்து சேவை செய்ய வேண்டுமா? காங்கிரஸ் கட்சியின் இப்போதைய கொள்கை தான் என்ன? தேர்தல் வந்துவிட்டால் திடீர் சிவ பக்தர்கள் ஆகிவிடுவதே அவர்களின் கொள்கையா?” என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக அஜய் சுக்லா என்ற எக்ஸ் தள பயனர் ஒருவர், “தங்கள் தந்தை பெற்றதும், தங்களது குடும்பமும் இன்று பெற்றுள்ளது அனைத்தும் காங்கிரஸ் கட்சியின், காந்தி – நேரு குடும்பத்தின் ஆசியால் வழங்கப்பட்டது. தங்கள் சகோதரர் தந்தையின் பெயரை வைத்துக் கொண்டு தேர்தலை தனித்து எதிர்கொள்ள முடியவில்லை. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டு நீங்கள் கொண்ட கொள்கையில் இருந்து விலகிப் போனீர்கள். அதுதான் உண்மை” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சர்மிஷ்டா முகர்ஜி மேற்கூறிய ட்வீட்டை பதிவிட்டார்.
திங்கள்கிழமை ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவை ஒட்டி அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அடிமட்ட அளவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்பு தேர்தல்கள், கட்சிக் கொள்கை முடிவுகள் எல்லாம் முறையாக நடக்க வேண்டும். பிரணாப் முகர்ஜி இவற்றைப் பற்றி தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு என்று மந்திரக்கோல் ஏதும் இல்லை. ராகுல் காந்தி எப்படிப்பட்டவர் என்று விமர்சிப்பது என் வேலை அல்ல. ஒரு தனிநபரை இன்னொருவர் அவ்வாறு விமர்சித்து வரையறுப்பது சாத்தியமற்றது. என் தந்தை எப்படிப்பட்டவர் என்று விமர்சிக்கச் சொன்னால் கூட எனக்கு அது கடினமே.
ஒரு காங்கிரஸ் ஆதரவாளராகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் நான் கட்சியைப் பற்றி கவலை கொள்கிறேன். காந்தி – நேரு குடும்பத்தைத் தாண்டி கட்சிக்கு தலைமையை யோசிக்க காலம் வந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, கருத்துச் சுதந்திரம், அனைவரையும் உள்ளடக்கிய பார்வை போன்ற அதன் அடிப்படைக் கொள்கைகளை காங்கிரஸ் இன்னமும் பின்பற்றுகிறதா என்பதை கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.