
கலாபவன் மணியை அவமதித்தேனா? – மனம் திறந்த திவ்யா உன்னி
கடந்த 23 வருடங்களுக்கு முன்பு தமிழில் கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். சினிமாவில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியை அவரது நிறத்தைக் காரணம் காட்டி அவருடன் நடிக்க மறுத்து அவமதித்தார் என ஒரு சர்ச்சை எழுந்தது. கலாபவன் மணியின் ரசிகர்கள் இவரை கடுமையாக அர்ச்சனையும் செய்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சர்ச்சையான செய்தி குறித்து திவ்யா உன்னியிடம் கேட்கப்பட்டபோது, “நான் மணி சேட்டனுடன் (கலாபவன் மணி) நெருங்கிய நட்பு கொண்டிருந்தேன். நான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருடன் இணைந்து நடித்து இருந்தேன். தொடர்ந்து பல படங்களில் அவருடன் நடித்தேன். ஆனால் யார் இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி விட்டார்கள், எதற்காக செய்தார்கள் என தெரியவில்லை. மணி சேட்டன் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு இந்த விஷயம் பற்றி பேசுவதற்கே சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் இதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.