தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் சூடாகிவிட்டது. மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் ஆர்.கே மடம் சாலையில் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்தது, பா.ஜ.க.

இந்த அலுவலகம் அக்கட்சியின் சென்னை நாடாளுமன்றப் பொறுப்பாளர் ராஜா தலைமையில், மூத்த தலைவர்கள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடம் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது.

இந்த நிலையில், ‘வணிகரீதியில் இடத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி, அறநிலையத்துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்கிறார்கள், பா.ஜ.க-வினர். பிறகு அங்கு தேர்தல் அலுவலகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்’ என்ற சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அங்கு சென்று ஆய்வு செய்தனர். பிறகு பா.ஜ.க-வின் தேர்தல் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர். இது பா.ஜ.க-வினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.