புகையிரத சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரங்களை விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு

புகையிரத சேவை தொடர்பில் பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் வெறுப்பூட்டும் பிரசாரங்கள் பரப்பப்படுவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஏதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கின்ற ரயில்வே பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு காத்திருக்காமல் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பது நியாயமில்லை எனவும்; சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு வழிவகுக்கும் அரசியல் சதிகள் தொடர்பில் உரிய திணைக்களங்கள் பொறுப்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதாலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

ரயில்வே பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயிலில் பயணிக்கும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், புகையிரத பருவச் சீட்டு; பயணிகள் என ஏனைய பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுவதாகவும், இது தொடர்ந்தும் இடம்பெறும்போது, தான் விருப்பமில்லையாயினும் கூட தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், அரச நிர்வாகத்தில், அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக அமைச்சரோ அல்லது அமைச்சரவையோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, எந்தவொரு கோரிக்கையையும் முன்வைத்து பலவந்தமாக நிறைவேற்ற முடியாது எனவும், அந்த விடயங்களுக்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு இருப்பதாகவும், அதனூடாக எடுக்கும் தீர்மானங்கள் ஏனைய அனைத்து அரச சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். பணிப்புறக்கணிப்பு அல்லது பணி நிறுத்தம் காரணமாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழு எந்தவொரு தீர்மானங்களை எடுக்காது என்றும்; அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.