சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பாஜக வேட்பாளராக மனோஜ் சோன்கர், இண்டியா கூட்டணி வேட்பாளர் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோவும் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால், மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது. ஆம் ஆத்மியின் சார்பில் நிறுத்தப்பட்ட குல்தீப் குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சண்டிகர் மாநகராட்சியில் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறுதேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் குல்ஜீத் சிங் சந்துவும், காங்கிரஸ் சார்பில் குர்பிரீத் காபியும் மூத்த துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும் பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மாவும், காங்கிரஸ் சார்பில் நிர்மலா தேவியும் துணை மேயர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இந்நிலையில், 35 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல, துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜிந்தர் சர்மாவும் அதே வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.