வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவிற்கு ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாட்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பணம் தனியார் நிறுவனங்களுக்குச் செல்கிறது. இந்த நிறுவனங்களில் ஒரு தலித் அல்லது பழங்குடியினரை நீங்கள் காண முடியாது. இந்தியாவின் சொத்து யார் கையில் எவ்வளவு உள்ளது என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவிற்கு ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய கல்லூரிகளின் நிர்வாகத்தில் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரை கூட காண முடியாது. பழங்குடியினர் தான் இந்தியாவில் உள்ள நிலத்தின் முதல் உரிமையாளர்கள். நீர், காடு மற்றும் நிலத்தில் உங்களுக்கு உரிமை உண்டு. பா.ஜ., உங்களை வனவாசி என்று அழைக்கிறது. உங்களுக்கு உரிமை கொடுக்க விரும்பாததால் உங்கள் பெயரை மாற்றினார்கள்.
காங்கிரஸ் கட்சி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றி, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகம் பெற்றுத் தரும். இதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் உங்களுக்குச் செய்யும். வளர்ச்சி என்ற பேரில் பா.ஜ., அரசு உங்கள் தண்ணீரையும், காடுகளையும், நிலத்தையும் கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தது. நாட்டில் வெறுப்பு பரவி வருவதால், சகோதரனே சகோதரனுக்கு எதிராகச் சண்டையிடுகிறார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement