ஐ.பி.எல். 2024: டெல்லி அணியின் கேப்டன் இவர்தான்… அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட், அதே ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவர் 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் முழுவதையும் தவறவிட்டார்.

அதன் காரணமாக டேவிட் வார்னர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்டிருந்தார். அவரே இந்த ஆண்டும் கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தில் இருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் இந்த சீசனில் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியிருக்கிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெல்லி நிர்வாகம், ரிஷப் பண்டை தங்களது கேப்டனாக நியமித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.