ஐ.பி.எல்; பூரன் போராட்டம் வீண் – லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ஜெய்ப்பூர்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று மாலை ஜெய்ப்பூரில் நடைப்பெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் அரைசதத்தின் (82 ரன்) மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய படிக்கல் 0 ரன், பதோனி 1 ரன், ஹூடா 26 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ராகுலுடன் பூரன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ராகுல் 58 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஸ்டோய்னிஸ் 3 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. லக்னோ அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய பூரன் 64 ரன்னுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.