மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியில் தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், கடலூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) அன்று நெல்லை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை (மார்ச் 27) தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இழுபறிக்கு காரணம் என்ன? மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி, மணி ஷங்கர் ஐயர், செல்லக்குமார் மற்றும் சுதா ஆகியோரது பெயர் பரிசீலனையில் இருந்தது. கடுமையான போட்டி காரணமாக வேட்பாளரை தேர்வு செய்வது கட்சி தலைமைக்கு சவாலான காரியமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இறுதியில் கட்சித் தலைமையின் சார்பில் சுதா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா நடந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.