ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி: வாக்காளர்களை குழப்ப முயற்சி?

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும் மனுதாக்கல் செய்தனர்.

நேற்று வரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயர், இன்ஷியலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள 5 பேருமே சுயேச்சைகள். இவர்களுக்கு சுயேச்சை சின்னங்களே ஒதுக்கப்படும்.

வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது புதிய சின்னம் என்பதால் எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னம் என்பது நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும். 5 பேரின் பெயர்கள் வரிசையாக இடம்பெற்றிருக்கும். சின்னம் மட்டுமே வேறுவேறாக இருக்கும். பெயரைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும். சின்னத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டு வாக்களிக்க முடியும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி, பலா, திராட்சை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார். தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள மற்ற 4 பேரும் தங்களுக்கும் அதே சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான் ஒரே பெயர், இன்ஷியலைக் கொண்ட நபர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தச் செயலில் ஈடுபடுகின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.