தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். டேங்கர் லாரியில் குடிநீர் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சுபாஷ். இவருக்கு 2 வயதாக இருக்கும் போது காளியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மகன் சுபாஷ், தனது தாய்மாமா சவுந்தரராஜன் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது தந்தை பாலசுப்பிரமணியனை பார்த்துவிட்டு செல்வாராம். இந்த நிலையில், தாய்மாமாவுடன் சேர்ந்து டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வந்துள்ளார் சுபாஷ். இதற்கிடையில் தந்தை பாலசுப்பிரமணியனுக்கும் சுபாஷுக்கும் சொத்துப் பிரச்னையும் இருந்து வந்துள்ளது. தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் சுபாஷை காணவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும், அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்துள்ளது. சுபாஷ் மாயமானது குறித்து அவரது தாய்மாமா சவுந்தரராஜன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பாலசுப்பிரமணியன் தலைமறைவானார். அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரையும் தேடி அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 7-ம் தேதி சொத்தை பிரித்து தருமாறு பாலசுப்பிரமணியனிடம் சுபாஷ் கேட்டதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், சுபாஷின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை ஓட்டப்பிடாரம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியுள்ளது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.